Thursday, June 9, 2011

எண்டோசல்பான் - உயிரை உறிஞ்சும் பூச்சிக்கொல்லி ( Human killer Pesticide Endosulfan )


கேரளாவின் என்மகஜே பஞ்சாயத்தில் உள்ள படர் கிராமத்தில் வசிப்பவர், நாராயண பட். அவரது தந்தை புற்றுநோயினால் தாக்கப்பட்டு மரணமடைந்தார். தாய் சிறுநீரகப் புற்றுநோயால் இறந்தார். 35 வயதான அவரது தங்கையும், 22 வயதான மருமகனும் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள். இன்னொரு மருமகன் விஷ்ணுவுக்கு வலிப்பு நோயின் பாதிப்போடு மனநிலை பாதிப்பும் இருந்தது. விஷ்ணுவின் இரத்தத்தை பரிசோதித்துப் பார்த்த போது அவரது இரத்தத்தில், 108.0 பி.பி.எம். (Parts-Per-Million) அளவிற்கு என்டோசல்பான் (Endosulfan) என்கிற பூச்சிக் கொல்லி(?) மருந்து இருந்ததைப் பரிசோதனையில் கண்டறிந்தனர்.

2002 இல் ஆறு வயதான சிறுவன் பாலகிருஷ்ணன் மூளையில் கட்டி ஏற்பட்ட நிலையில் இறந்து போக, அவனைக் காப்பாற்றுவதற்கு வசதி, வாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையில் விதியென அவனை அழுகையுடன் வழியனுப்புகின்றனர், அவனது ஏழைப் பெற்றோர்.

நாராயண பட், பாலகிருஷ்ணன் குடும்பத்தைப் போல இவர்களது இருப்பிடத்தைச் சுற்றி அமைந்துள்ள பல்வேறு கிராமங்களிலும் இதுபோன்ற கொடுமைகள் அரங்கேறிக் கொண்டிருந்தன. மனிதர்களுக்கு மட்டுமின்றி, அப்பகுதி மக்களால் வளர்க்கப்பட்டு வந்த கால்நடைகளுக்கும் உடற்கோளாறுகள் ஏற்பட்டு அவதிப்பட்டன. நரம்பு மண்டல பாதிப்புகளுடனும், மனநிலை பாதிப்புகளுடனும், உடல் ஊனமுற்ற நிலையிலும் குழந்தைகள் பிறந்தன. வயதானவர்களுக்கு தோல்நோய், புற்றுநோய் என பல்வேறு பாதிப்புகளும் உண்டாகின. இந்த அசாதாரண உடற்கோளாறுகளின் மூல காரணத்தைக் கண்டறிய யாரும் அவ்வளவு சிரமப்படவில்லை. அவர்கள் வாழும் பகுதி முழுவதிலும் கேரள அரசின் முந்திரித் தோப்பில் தெளிக்கப்பட்டு வந்த என்டோசல்பான் என்கிற பூச்சிக் கொல்லி மருந்தின் பாதிப்பே இது என்று கண்டு பிடிக்கப்பட்டது.

ஏறத்தாழ 1978லிருந்து கால் நூற்றாண்டாக அந்தப் பகுதியில் 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள முந்திரித் தோப்புகளில் தெளிக்கப்பட்டு வந்த இப்பூச்சிக் கொல்லி மருந்தால் தான் அப்பகுதி முழுவதிலும் வாழும் மக்கள் பல்வேறு உடற்கோளாறுகளால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வந்ததும் வெளிச்சத்திற்கு வந்தது.

1990களில் இருந்தே இதன் பாதிப்புகள் பெரிய அளவில் வெளிப்பட்டு வந்த நிலையில், கேரள அரசும் இந்திய அரசும் இணைந்து இதுவரை 11 குழுக்கள் அமைத்து இது குறித்து விசாரணை நடத்தியிருக்கின்றன. ஆனால் நிரந்தரத் தீர்வு ஒன்றும் எட்டப்படவில்லை.

வெறும் பூச்சிக் கொல்லி மருந்து என அறிமுகப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்த என்டோசல்பான், பூச்சிக் கொல்லி மருந்து மட்டுமல்ல மனித உயிர்களைக் காவு வாங்கும் உயிர்க்கொல்லியாகவும் அது செயல்பட்டு வந்ததை பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், அரசு சாரா அமைப்புகளும் அவ்வப்போது ஆய்வு செய்து வெளியிட்டு வந்தன.

முதியவர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள் மட்டுமின்றி கருவில் இருந்த குழந்தைகளையும் பாதிப்படையச் செய்த இந்த பூச்சிக் கொல்லி மருந்து ஆண்டுக்கு 3 முறை என 1978லிருந்து 2001ஆம் ஆண்டு வரை கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் அமைந்துள்ள முந்திரிப் பயிர்களில் தெளிக்கப்பட்டு வந்ததாகக் கேரள அரசு இது குறித்து ஆராய்ந்து அளித்த தமது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. கேரள முதல்வர் அச்சுதானந்தன் இம் மருந்தை இந்திய அளவில் தடை செய்ய ஒருநாள் அடையாள உண்ணாநிலை மேற்கொண்டார். ஆனால், இந்திய காங்கிரஸ் அரசு இம்மருந்தை தடை செய்ய விரும்பவில்லை என அறிவித்தது.

என்டோசல்பானில் ஏற்பட்ட பாதிப்புகளை கணக்கில் கொண்டு, 2001ஆம் ஆண்டு திருமதி. லீலா குமாரி என்பவர் கேரளாவின் மாவட்ட நீதிமன்றம் ஒன்றில், என்டோசல்பான் தெளிப்பதற்கு இடைக்காலத் தடை ஆணையைப் பெற்றார். எனினும், பூச்சிக் கொல்லி மருந்து நிறுவனங்களின் தலையீட்டால் இந்தத் தடை தகர்க்கப்பட்டது. பின்னர், 2003இல் கேரள உயர்நீதி மன்றம் என்டோசல்பான் மருந்தைத் தெளிக்க தடை விதித்த மாவட்ட நீதிமன்றத் தீர்ப்பை உறுதிப்படுத்தி மீண்டும் தடைஉத்தரவு பிறப்பித்தது. தொழில் வழி சுகாதாரத்திற்கான தேசிய நிறுவனம் அளித்த அறிக்கையை முன்னிட்டு கேரள அரசு அம் மருந்தை நிரந்தரமாகத் தடை செய்தது.

அம்மருந்து கேரளாவில் மட்டுமின்றி, கர்நாடகத்திலும் தடை செய்யப்பட்டது. ஆனால், இந்தியா முழுவதிலும் உள்ள மற்ற மாநிலங்களில் இது பயன்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியக் காங்கிரஸ் அரசு என்டோசல்பான் மருந்தைத் தடை செய்ய மறுத்து வரும் நிலையில், இந்திய அரசின் அம்முடிவுக்கு எதிரான போராட்டம் வலுத்து வருகின்றது. உலகளவில் என்டோசல்பானை அதிகளவில் பயன்படுத்தும் முதன்மை நாடு இந்தியாவே என்பதும் கவனிக்கத்தக்கது.

உணவை உற்பத்தி செய்து உலகின் பசியாற்றும் உழவுத் தொழில் இன்றைக்கு உலகமயப் பொருளியல் வளர வளர நலிந்து போயுள்ளதை நாம் அறிவோம். ஆயினும், உணவு உற்பத்தியை தேவை அடிப்படையில் செய்யாமல், இலாபத்தின் அடிப்படையில் செய்திட பூச்சிக் கொல்லி மருந்து உள்ளிட்டவற்றை 'விஞ்ஞான வளர்ச்சி' என்ற பெயரில் பல்வேறு நாடுகளின் உழவர்களிடையே வலிந்துத் திணித்தது முதலாளியம்.

இரசாயன வேளாண்மை உழவர்களுக்கு இலாபம் தரவில்லை. மாறாக அவர்களைக் கடனாளி ஆக்கியது. ஆனால் பூச்சிக் கொல்லி நிறுவனங்கள் இலாபத்தில் கொழுத்தன.

பருவநிலை மாறுதலால் புதிய புதிய நோய்கள் உருவாகி பயிர்களை அழிப்பது ஒருபுறம் இருந்தாலும், இரசாயனப் பொருட்களாலும் மருந்துகளாலும், பயிர்களை குறைந்த காலத்தில் வேக வேகமாக வளர்த்திட புதிது புதிதான வேதி மருந்துகளும், புகுத்தப்பட்டன. புதிய புதிய பூச்சிகளும், நோய்களும் பயிர்களைத் தாக்கின. பின், புதிதாக வளர்ந்த பூச்சிகளைக் கொல்வதற்கென பூச்சிக் கொல்லி மருந்துகள் கண்டறியப்பட்டு, உழவர்களை அம்மருந்துகளின் மேல் மோகம் கொள்ள வைத்தன, மருந்து நிறுவனங்கள்.

உழவுத் தொழிலில் மட்டும் 2001ஆம் ஆண்டு உலகெங்கும் பயன்படுத்தப்பட்ட பூச்சிக் கொல்லி மருந்துகளின் அளவு 5.05 பில்லியன் பவுண்டுகள் (5005 கோடி பவுண்டு) என சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை (Environmental Protection Agency - EPA) அமைப்பு கணக்கிட்டது. சற்றொப்ப 31.8 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பூச்சிக் கொல்லி மருந்துகள் அவ்வாண்டு பயன்பாட்டில் இருந்ததையும் அது அறிவித்தது. இவை அனைத்தும் நம் பூமிப்பந்தின் மீது நடத்திய இரசாயனத் தாக்குதலால் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கும் என்று எண்ணும்போது அதிர்ச்சியே மேலிடுகின்றது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் பூச்சிக் கொல்லி மருந்துகள், அவை எதை அழிக்க பயன்படுத்தப்படுகின்றனவோ அதைத் தவிர 98 விழுக்காட்டுப் பொருட்கள் மீதே பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

1950களில் கண்டுபிடிக்கப்பட்ட என்டோசல்பான் எனப்படுகின்ற இப்பூச்சிக் கொல்லி மருந்து, உலகெங்கும் தொட பயன்படுத்தப்பட்டு வந்ததன் விளைவாக பல்வேறு நாடுகள் இதனால் பாதிப்பைச் சந்தித்தன. பல்வேறு நாடுகளில் என்டோசல்பான் தெளிக்கப்பட்ட நீரைப் பருகிய கால்நடைகளும், மீன்களும் இறந்து போயின. இதனைத் தொடர்ந்து பயன்படுத்திய உழவர்கள் மடிந்தனர் அல்லது நோய்வாய்ப்பட்டனர். 2002ஆம் ஆண்டு இம்மருந்து நீரில் நச்சுத்தன்மையை பாய்ச்சுவதாகக் கூறி வடஅமெரிக்க மீன் மற்றும் வனத்துறையினர் இம் மருந்தைத் தடை செய்ய பரிந்துரைத்தனர். இவ்வாண்டு வரை ஏறத்தாழ 80க்கும் மேற்பட்ட நாடுகள் என்டோசல்பான் மருந்துகளை தடை செய்துள்ளன.

1995ஆம் ஆண்டு ஐக்கிய நாட்டு சுற்றுச்சூழல் திட்டம் (United Nations Environment Programme - UNEP) மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வேதிப் பொருட்களை தடை செய்ய வலியுறுத்தியது. இதன் விளைவாக மே 2001இல் ஸ்டாக்ஹோம்மில் முடிவு எட்டப்பட்டு மனித இனத்திற்கு கேடு விளைவிக்கும் பல்வேறு வேதிப்பொருட்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டது. 2009ஆம் ஆண்டு இப்பட்டியலில் என்டோசல்பானை சேர்க்கவும் அவ்வமைப்பு ஒப்புக் கொண்டது.

இப்பட்டியலில் என்டோசல்பானை சேர்த்தால், உலகளவில் அப்பொருளைப் பயன்படுத்த தடை விதிக்கப்படும். இதனால் இதனை உற்பத்தி செய்யும் தனியார் பெருநிறுவனங்கள் நட்டமடையும். உலகளவில் அதிகமாக பயன்படுத்தும் நாடாக விளங்கும் இந்திய அரசு, உலகமயப் பெருமுதலாளிகளுக்கு ஏற்படும் இந்த நட்டத்தை தடுக்கவே, இம் மருந்தை தடை செய்ய விரும்பவில்லை. ஸ்டாக்ஹோம் ஒப்பந்தத்தில் இம்மருந்தை இணைக்கவும் இந்தியா எதிர்க்கிறது.

என்டோசல்பான் மருந்திற்கு பதிலாக, மனித இனத்திற்கு கேடு விளைவிக்காத மற்றொரு பூச்சிக்கொல்லி மருந்தை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் சிலர் கூறுகின்றனர். இது தீர்வல்ல. மனித இனத்திற்கு கேடு விளைவிக்காத செயற்கையான வேதிப்பொருட்கள் என ஒன்றும் இருக்க முடியாது. என்டோசல்பான் போன்ற பூச்சிக் கொல்லி மருந்துகள் மட்டுமின்றி, உழவர்களின் உயிரைப் பறிக்கும் அனைத்து விதமான பூச்சிக் கொல்லிகளையும் நாம் முற்றிலும் புறக்கணித்தே ஆக வேண்டும்.

நன்மை தரும் பூச்சிகளையும், பறவைகளையும் கொண்டு தீமையான பூச்சிகளை பூச்சி விரட்டிக் கலவைகளை உருவாக்கித் தெளிப்பது ஆகியவையேவது, அல்லது கொல்வது மரபு வகை வேளாண்மையில் இருக்கும் உத்தியாகும். இதுவே இச்சிக்கலுக்குத் தீர்வாகும். என்டோசல்பானை இந்திய அரசு தடை செய்ய வேண்டும்.


நன்றி: தமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம்

அழிந்து வரும் பூச்சியினமும் நசிந்து வரும் விவசாயமும்


கண்மூடித்தனமாக பூச்சிகொல்லி மருந்து பயன்படுத்துவதால் நன்மை பயக்கும் பூச்சிகளும் அழிந்து வருகின்றன. அதன் தொடர் விளைவாக விளைச்சல் பாதிக்கப்பட்டு விவசாயம் பெரும் சிக்கலை சந்திக்கிறது என சமீபத்தில் வெளியான ஆய்வு அறிக்கை கூறுகிறது. கொல்கத்தா பல்கலைக் கழகத்தை சார்ந்த உயிரியல் ஆய்வாளர் பார்த்திபோ போஸ் என்பார் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வு இதனை தெரிவிக்கிறது.

பெரும்பாலான தாவரங்கள் இனப்பெருக்கம் செய்வது பூக்களில் மகரந்த சேர்க்கை வழி தான். இந்த மகரந்த சேர்க்கை என்பது ஒரு பூவிலிருந்து மற்றொரு தாவர பூவிற்கு மகரந்தம் செல்வது எனும் அயல் மகரந்த சேர்க்கை மற்றும் ஒரு தாவரத்தின் ஒரு பூவிலிருந்து அதே தாவரத்தின் மற்றொரு பூவிற்கு மகரந்தம் செல்வது எனும் தான் மகரந்த சேர்க்கை என இரு வகைப்படும். இரண்டு வகை மகரந்த சேர்க்கையும் தானே நடைபெறாது, தாவரத்திற்கு மகரந்த சேர்க்கை நடைபெற்று இனப்பெருக்கம் செய்ய துணை தேவை.

அரிசி, கோதுமை போன்ற புல் வகை தாவரங்களுக்கு, அதாவது தானிய விளைச்சல் தரும் தாவரங்களுக்கு காற்று தான் துணை. இவற்றின் பூக்கள் மிக சிறிதாய், கண்களுக்கு புலப்படத அளவில் இருக்கும். மென் காற்று வீசும் போது பூக்களின் மகரந்தம் அடித்து செல்லப்பட்டு அடுத்த தாவரத்தில் படியும். இவ்வாறு இந்த வகை தாவரங்களில் மகரந்த சேர்க்கை இயல்பில் நடைபெறும். காற்று தான் இந்த வகை தாவரங்களுக்கு துணை.

ஆனால் வேறு பல தாவரங்களில் மகரந்த சேர்க்கை நடைபெற பூச்சிகளின் உதவி தேவை. பொதுவாக தேனீ, வண்டு, பட்டாம் பூச்சி என பல்வேறு வகை பூச்சிகள் மகரந்த சேர்க்கைக்கு உதவுகின்றன. பூவின் தேன் குடிக்க வரும் தேனீ அதன் கால்களில் மகரந்தத்தை எடுத்துச் சென்று மற்றொரு பூவில் அமரும்போது அந்த பூவில் மகரந்தத்தை செலுத்துகிறது. இவ்வாறு மகரந்த சேர்க்கைக்கு உதவுகிறது. அயல் மகரந்த சேர்க்கை, தான் மகரந்த சேர்க்கை இரண்டிற்கும் பூச்சியினம் இன்றியமையாதது.

பெருமளவு தானிய பயிர்களுக்கு பூச்சிகள் மகரந்த சேர்க்கைக்கு அவசியமில்லை என்றாலும், பல்வேறு காய் கனிகள் பயிர் செய்ய தேனீயின் உதவி அவசியம். பூசணி, பரங்கி, வெள்ளரிக்காய் என பல்வேறு காய்கனி தாவரங்கள் விளைச்சல் தர பூச்சிகள் அவசியம். தான் மகரந்த சேர்க்கை ஏற்படும் கத்தரிக்காய் போன்ற தாவரத்திலும், உள்ளபடியே அயல் மகரந்த சேர்க்கை நடைபெற்றால் சூல் கொள்ளுதல் மிகுந்து அதிக பூ காய் தரும். எனவே மகசூல் அதிகரிக்கும்.

வகை தொகை இல்லாமல் பூச்சிமருந்து பயன்படுத்துவதால் மகரந்த சேர்க்கைக்கு உதவும் பூச்சியினம் அழிந்து இந்தியாவில் விளைச்சல் மட்டுபட்டுள்ளது என பார்த்திபோ போஸ் அவர்களின் ஆய்வு தெரிவிக்கிறது. மேலை நாடுகளில் தேனீ வளர்ப்பு என்பது பரவலாக நடைபெறுகிறது. எனவே இதுகாறும் செயற்கையாக வளர்க்கப்படும் தேனீக்கள் அருகில் உள்ள வயல் வெளிகளில் மகரந்த சேர்க்கைக்கு உதவி விளைச்சலை பெருக்கி வந்தது. சமீபத்தில் அங்கு பெருமளவு செயற்கை தேனீ கூடுகள் பதிக்கபட்டு தீடீர் என தேனீக்கள் மடிந்தன. இதன் தொடர்ச்சியாக அங்கு சமீப ஆண்டுகளில் மகசூல் பெருமளவு பாதிக்கப்பட்டு விளைச்சல் குறைந்துள்ளது. ஐரோப்பா அமெரிக்க முதலிய நாடுகளைப் போல செயற்கை தேனீ வளர்ப்பு இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் இல்லை. எனவே இங்கு இயற்கை தேனீ மற்றும் பூச்சிகள் பயிர் தொழிலுக்கு மிக அவசியம்.

ஒவ்வொரு ஆண்டும் பூச்சியினத்தின் நிலை அறிந்து, அந்த ஆண்டு ஏற்படும் காய்கனி விளைச்சலை அதனுடன் ஒப்பிட்டு பார்த்து ஆராய்வது தான் சால சிறந்ததது. பூச்சிகள் அருகும் போது விளைச்சல் குறைகிறது. பூச்சிகள் பெருகும் போது விளைச்சல் கூடுகிறதா என அறியமுடியும். ஆனால், இந்தியாவில் பூச்சியினங்களின் நிலை குறித்த ஆய்வு விவரங்கள் இல்லை. எனவே நேரடியான ஆய்வு சாத்தியமில்லை. இதன் காரணமாகத்தான், நேரடியான ஆய்வுக்கு பதிலாக மறைமுக ஆய்வு நடத்த திட்டமிட்டனர்.

தமது ஆய்வுக்காக பூச்சியினால் மகரந்த சேர்க்கை ஏற்படும் தாவரம், மற்றும் காற்றினால் மகரந்த சேர்க்கை ஏற்படும் தாவரம் இரண்டையும் எடுத்துக் கொண்டனர். நவீன விவசாய முறையில், பூச்சிகொல்லி, வேதி உரம் முதலியன இட்டு பயிர் தொழில் செய்யும் போது, இடு பொருள் கூட கூட காற்றினால் மகரந்த சேர்க்கை ஏற்படும் பயிர்களில் விளைச்சல் உயர்ந்துகொண்டே சென்றது. மண் தான் செழிப்பை இழப்பது போன்ற காரணங்களினால் விளைச்சல் விகிதம் சற்றே குறைந்தாலும், மொத்த விளைச்சல் கூடியது. ஏக்கருக்கு பயிர் விளைச்சல் தரும் மகசூல் கூடியது.

ஆனால் பூச்சிகளால் மகரந்த சேர்க்கை ஏற்படும் பயிர்களில் பூச்சிமருந்து வேதி உரம் முதலிய முதலில் விளைச்சலை பெருக்கினாலும், காலப் போக்கில் விளைச்சல் பெருகவில்லை. ஏக்கருக்கு மகசூல் குறைந்தது என்பது புலனாகியது. அதாவது, வேதி பொருள் கொண்டு நடத்தப்படும் விவசாயத்தினால் பூச்சிகள் பாதிக்கப்பட்டு விளைச்சல் மட்டுப்பட்டது என்பது குறிப்பால் விளங்கியது.

விவசாயத்தில் நேரடியாக புலப்படும், நீர், மண், பதிப்பு தரும் பூச்சி தொல்லை முதலிய தவிர கண்களுக்கு புலப்படாத மகரந்த சேர்க்கையும் முக்கியமானது என இந்த ஆய்வு நமக்கு தெரிவிக்கிறது.

உலகில் சுமார் 146 நாடுகளின் 90 சதவிகித உணவு தேவையை பூர்த்திசெய்யும் நூறு தாவரங்களில் எழுபத்தொன்று தாவரங்கள் பூச்சியினால் மகரந்த சேர்க்கை ஏற்படும் தாவரங்கள் ஆகும். இதிலிருந்து மகரந்த சேர்க்கை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை புரிந்து கொள்ளலாம். இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 7.5 டன் காய்கனி உற்பத்தியாகிறது. உலக காய்கனி உற்பத்தியில் இது 14 சதவீதம் ஆகும். சீனாவிற்கு அடுத்தபடியாக உலகில் இரண்டவது இடத்தில் உள்ள நாடு இந்தியா. மகரந்த சேர்க்கை செய்யும் பூச்சியினங்கள் அருகினால் இந்திய விவசாயம் பெருமளவு பதிக்கப்படும் என்பது திண்ணம். உணவு உற்பத்தி குறைந்தால் உணவு பாதுகாப்பு மட்டுப்படும் பஞ்சநிலை ஏற்படலாம் என அறிஞர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

வேதிப்பொருள் சார்ந்து நடைபெறும் இன்றைய விவசாயமுறை நிலைதகு முறையல்ல என கூறும் பர்த்திபோ போஸ், சூழலியல் விவசாய முறைக்கு நாம் மாறவேண்டும் என அறிவுறுத்துகிறார். சூழலியல் விவசாய முறை என்பது பண்டைய முறைக்கு செல்வதல்ல என விளக்கும் போஸ், இயற்கையில் தாவர வளர்ச்சி குறித்து அறிந்து, சூழலியல் பார்வையில் மிகு நவீன அறிவியலின் பயன்பாடே சூழலியல் விவசாயம் என கூறுகிறார்.

பூச்சிகொல்லி மருந்து பயன்படுத்திட வேண்டுமென்றாலும், எந்த நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை தெளிப்பது என்பதில் தேர்வு வேண்டும். பொதுவாக அதிகாலையில் நன்மை தரும் பூச்சிகள் மற்றும் தேனீக்கள் இயங்காது. எனவே அதிகாலையில் பூச்சிமருந்தை அடித்தால் ஒரளவு நன்மை பயக்கும் பூச்சிகளை தீங்கிலிருந்து பாதுகாக்கலாம். சில தாவரங்களின் பூக்கள் நண்பகலில் இதழ் மூடிக் கொள்ளும் தன்மை வாய்ந்தவை. இந்த தாவரம் பயிரிடப்படுள்ள நிலத்தில் மகரந்த சேர்க்கை செய்யும் பூச்சிகள் இதழ் மூடிய நண்பகலில் பூவை அண்டாது. எனவே இங்கு நண்பகலில் பூச்சி மருந்தை அடிப்பதே சிறந்தது. இவ்வாறு பூச்சிகள் இயக்கம், தாவர இயல்பு முதலிய அறிந்து அளவோடு பூச்சிமருந்தை பயன்படுத்துவது அறிவுடைமை என்கின்றனர் சூழலியல் வேளாண்மை ஆய்வாளர்கள்.

உள்ளபடியே இன்று அளவுக்கு அதிகமான பூச்சி மருந்து மற்றும் உர பயன்பாடு விழலுக்கு இறைத்த நீர் போல எதிர்மறை விளைவை தருகிறது. தீமை பயக்கும் பூச்சிகளை மட்டுமல்ல நன்மை தரும் பூச்சிகளையும் கொல்கிறது. உரம் தாவர வளர்ச்சிக்கு உதவுவது தவிர மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளை பாதித்து மண் செழிப்பை நசிக்கிறது. கண்மூடித்தனமான பூச்சிகொல்லி மருந்து பயன்பாடு, உர பயன்பாடு முதலிய தவிர்த்து, தாவரமும், நன்மை தரும் பூச்சிகளும் தீங்கு தரும் பூச்சிகளும் எவ்வாறு ஒன்றோடு ஒன்று உறவாடுகிறது என்பதை புரிந்து விவசாயம் செய்வதே சூழலியல் விவசாயம். இதற்கு நுட்பமான நவீன சூழலியல் அறிவு அவசியம்.

புதுவை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இயக்கி வரும் CERD எனும் ஆய்வு நிறுவனத்தில் முதலில் இத்தகு சூழலியல் விவசாய ஆய்வு பணிகளை துவங்கி பின்பு கொல்கத்தா பல்கலைக் கழகத்தில் சூழலியல் துறையில் விஞ்ஞானியாக பணிபுரிபவர் முனைவர் பார்த்திபோ போஸ் என்பது குறிப்பிடத் தகுந்தது. இவரது இந்த ஆய்வு முடிவு சமீபத்தில் இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சர்வதேச சூழலியல் கருத்தரங்கு ஒன்றில் சமர்பிக்கபட்டது.

நன்றி: செம்மலர்